வரும் கல்வியாண்டு முதல் பி.எட் 4 ஆண்டு படிப்பு அறிமுகம்
பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட். (இளநிலை கல்வியியல் படிப்பு) படிப்பை 2011-12 கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்வதற்கான தீவிர முயற்சிகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது.
இதற்கான பாடத் திட்டங்கள் தயாரிக்கும் பணி, முடியும் தருவாயில் உள்ளது. இப்பணியை பல்கலைக்கழக நிபுணர்கள் குழு மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள 631 கல்வியியல் கல்லூரிகள் சார்பில் ஓராண்டு பி.எட். படிப்புகள் இப்போது வழங்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பணிக்கு செல்ல விரும்பும் பட்டப் படிப்பு முடித்தவர்கள் மட்டுமே இந்த ஓராண்டு பி.எட். படிப்பில் சேர முடியும்.
இந்நிலையில், பிளஸ்2 முடித்த பின் ஆசிரியர் பணிக்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்காக பி.எஸ்சி.பி.எட். மற்றும் பி.ஏ.பி.எட். என்ற 4 ஆண்டு படிப்புகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மூலம் வழங்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் டி. பத்மநாபன் கூறுகையில், டெல்லியில் உள்ள தேசிய ஆசிரியர் மன்றத்தின் அங்கீகாரம் கிடைத்ததும், இந்த ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட். படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுவிடும். வரும் கல்வியாண்டிலேயே இப்படிப்புகள் அறிமுகம் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்த படிப்பின் ஒவ்வொரு பிரிவிலும் மாணவர்கள் இரண்டு முக்கிய பாடங்களை படிப்பர். அதாவது பி.எஸ்சி.பி.எட். படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய இரண்டு முக்கிய பாடங்களை மேற்கொள்வர். இதேபோல் பி.ஏ.பி.எட். படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் சமூகவியல் அல்லது தமிழ் மற்றும் சமூகவியல் என இரண்டு முக்கிய முக்கியப் பாடங்களை படிப்பர்.
இதன் மூலம் ஆசிரியர் கல்வியின் தரம் உயரும். மேலும் இந்த நான்கு ஆண்டு படிப்பை முடிக்கும் மாணவர்கள், பட்ட மேற்படிப்புகளை இரண்டு முக்கியப் பாடங்களில் எதில் விருப்பம் உள்ளதோ அதைத் தேர்வு செய்து கொள்ள முடியும். அதாவது பி.எஸ்சி.பி.எட். முடிக்கும் மாணவர், எம்.எஸ்சி. இயற்பியல் அல்லது எம்.எஸ்சி. வேதியியல் ஆகிய இரண்டு பட்ட மேற்படிப்புகளில் விரும்பியதை படிக்க முடியும்.
இதுபோல் பி.ஏ.பி.எட். முடிக்கும் மாணவர் எம்.ஏ. ஆங்கிலம், எம்.ஏ. சமூகவியல் அல்லது எம்.ஏ. தமிழ் ஆகிய மூன்று பட்ட மேற்படிப்புகளில் எதில் விருப்பம் உள்ளதோ அதைத் தேர்வு செய்து படிக்க முடியும். இப்போது பெங்களூரு, அஜ்மீர் உள்பட நான்கு பகுதிகளில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தின் கீழ் இயங்கும் கல்வியியல் நிறுவனங்களின் சார்பில் மட்டுமே இந்த 4 ஆண்டு பி.எட். படிப்புகள் இப்போது வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்பட இருப்பது இதுவே முதல்முறை. இந்த படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் இரண்டு முக்கிய பாடங்களை படிப்பதால் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுவது எளிது என்று பத்மநாபன் கூறினார்.